இரு மணம் ஒன்றி மகிழ்ந்து ஒரு மனம் ஆவது திருமணம் எனப்படுகிறது. ஒரு சடங்காக செய்யப்பட்டாலும் தெய்வீக சக்தி உடைய பல கிரியைகளை உள்ளடக்கியது.மந்திர ஒலியுடன் மங்கள இசை முழங்க. முன்னோர்களும் மூத்தோர்களும் பெரியோர்களும் ஆசி வழங்கிட அக்னி சாட்சியாக அம்மி மிதித்து அருந்ததி நோக்கி மங்கள நாண் பூட்டி கரம் பற்றி வாழ்க்கை துணையை அடைந்திட சான்றோர்கள் வகுத்த வாழ்க்கை நெறியே திருமணம் ஆகும். குணவதியும் குணவானும் கூடி குற்றமில்லா நல் குழந்தைகளைப் பெற்று வாழ்வதே நல்லகுடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்தது ஒரு குலம் பல குலங்கள் சேர்ந்தது ஒரு சமுதாயம், நல்ல சமுதாயங்களே. நிறைவானால் உலகம் பொலிவடையும். உலகத்தின் அமைதிக்கு தேவை தனி மனித ஒழுக்கம் அதைச் செய்வதே திருமணத்தின் நோக்கமாகும்.